ஓடித்திரிந்து அலுத்து
வந்து அமர்ந்து கொண்டான்....
மூச்சிறைப்போ, நீர் கோர்த்த
ஈரலின் இளைப்போ
எதுவும் இருக்கவில்லை...
வியப்பினூடே கவனித்துக்
கொண்ட சிறுவன்
தன் சுவாசம் என்பதை நிறுத்தி விட்டதை
உணர்ந்து,
இனியாவது மூன்றாம் பிறை
இரவில் அகாலங்கள்
அற்றுப் போய் விண்மீன்
தெரிக்கும் பால்வீதியில்
ஆன்ம ஓடத்தின் துடுப்பிடலாம்
எனும் போது,
முற்றும்,
இரட்டைச் சூரியன்
கொண்ட இந்தக்
கிரகத்தில் எனக்கு
வானவியலில் பெரிதாய்
ஈர்ப்பில்லாமற் போனதன்
உள்ளர்த்தம்
இரவில்லாத பிரபஞ்சம்
என் உலகம் மட்டுமே
என்று முடிந்துவிட்டதும்,
மீனுக்குக் காற்று வானம்...
இரவென்பதன் இருப்பே
அறியாதவனுக்கு
குளிரின் தேவையோ
நிழலின் அரவணைப்போ
தேவைபட்டிருக்கவில்லை...
ஈர்ப்பின் விதிகளை அவ்வளவு
எளிதாக மாற்ற முடியாது தானே...
வெளியெல்லாம் நிறைந்திருக்கும்
ஊர்க்குருவியின் கனவு...
ஒற்றை மயிர் நுனியில்
வந்து நிற்கும் ஆதி அந்தங்கள்..
நிதர்சனத்தைச் சோதித்துப்
பார்க்கும்
கருவி ஒன்றைக் கையிலெடுத்தான்...
இன்னும் நீர்த்துப் போயிருக்கவில்லை
அவன் நிதர்சனம்....